வாழும் கவிதை

நானோ நினைக்கின்றேன் இதுதான் கவிதையென்று.
நீயோ நினைக்கின்றாய்
அதுதான் கவிதையென்று.
அவனோ உரைக்கின்றான்
வேறொன்று கவிதையென்று.
இவனோ விமர்சித்தான் இது மட்டும்
கவிதையென்று.
இன்னொருவன் சொல்கின்றான்
“எல்லாமும்” கவிதையென்று.
எல்லோரும் எங்களெங்கள்
விருப்பத்தின் படி… கவிதை
‘இது’வென்றும் ‘அது’வென்றும் இடிபடுவோம்!
எங்களுக்குள்
பகைமை வளர்த்துப்
பகைவராயே மாறிவிட்டோம்!
கவிதை என ஒன்று உள்ளதுவே
அதன் கருத்தை
செவிசாய்க்க யாருமே திரும்பாமல்
அதைப்பேச
விட்டால்… பிரச்சினைதான் விளைந்து
பலர் பிழைப்பை
கெடுத்துவிடும் என்று கவனமாய் தடுக்கின்றோம்!
கவிதை…. எது உண்மைக் கவிதையெனக்
காலந்தான்
மேடையிலே ஏற்றி நிரூபிக்க
விமர்சனங்கள்
ஆயிரமும், சான்றுகளும், தத்துவமும் மௌனித்துப்
போவதுதான் வரலாறே…
யார் இன்றும் புரிந்து கொண்டோம்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply