உண்மையின் மகிமை!

சிரித்தபடி இரசித்தபடி எங்கள் மீது
தினம்அபாண்டப் பழிபோட்டு பொய்கள் நூறை
திரித்து எம்மை இழிவு செய்து ஊரே பார்க்கத்
திசைகளெங்கும் அவதூறு முரசறைந்தீர்!
மருமமாக அவைதிரண்டெம் கீர்த்தி சாய்க்க
வாடி அவமானமுற்றோம்! வெற்றி கொண்டீர்!
மறைந்திருந்தீர்! கல்லெறிந்தீர்! காயம் பட்டோம்.
மௌனமானோம்…எங்கள்முறை வரும்…நாம் காத்தோம்.

இன்றெங்கள் முறை உங்கள் திரைகிழிந்து
இழிவு செய்தோர் நீங்களென்று உலகறிந்து
நன்றாகச் சிக்கிவிட்டீர்! தப்பக்கூட
நம்மிடமே வழிகேட்டீர்… திகைத்துத் தோற்றீர்!
என் செய்தும் விடுபட எம் காலில் கூட
விழுந்து பாவ மன்னிப்பும் கேட்க வந்தீர்!
உண்மை எமைக் காத்தெங்கள் களங்கம் போக்கி
உடன்பதிலுஞ் சொல்லிற்று…. திருந்தும் நீவிர்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply