கண்முன் உங்கள் முகமே தெரியுது
கண்ணை மூடின் உம்முகம் வந்து போகுது!
சின்ன மாற்றமும் இன்றித் துயில்வதாய்
சிரிப்பில் பூத்த பூ வாடா திருந்திட
ஒன்றும் நடவாத மாதிரி…. உம்முகம்
ஒளிவடியா திருந்தது… தீயிடும்
முன்ஓர் தீச்சுடர் போல தொளிர்ந்தது!
மூண்ட தீ.. தீயிற் தானே படர்ந்தது!
கண்முன் உங்கள் முகமே தெரியுது!
கண்ணை மூட…உம்முகம் வந்து போகுது!
இன்று ஏதுமே மிஞ்சாதும் தேகமும்
எரிந்து மண்ணோடுங் காற்றோடும் போயினும்,
உண்மை முகத்தை.. இனிமீண்டும் காண்பது
ஒருபோதும் நடவா திதைத் தேறினும்,
கண்ட கடைசி முகவிம்பம்…உள்ளேயும்
கண்முன்னும் இப்போது வந்துவந் தேகுது!