சரி செய்!

விழுந்துதான் எழும்பு கின்றாய்.
வீதிகள் தோறும் சுற்றி
அழுது அர்ச்சனைகள் செய்தாய்.
அபிஷேகம் வாரா வாரம்
பழுதின்றிப் புரிந்தாய். அள்ளிப்
பணம் உண்டியலிலே இட்டாய்.
“வழியென்ன பாவம் போக்க”
வரம் தேடி தவம் நீ செய்தாய்.

செய்வதைச் சரியாய்ச் செய்து,
செல்வம் நேர் வழியில் சேர்த்து,
பொய் வகை வகையாய்ப் பெய்யும்
புலுடாக்கள் விட்டு, தர்மம்
கைகளால் அன்றி நெஞ்சால்
கருத்தினால் செய்து, “எவ்வாறு
எய்தலாம் இலாபம்” என்று
ஏங்காது நீ முயன் றால்….

ஏனடா கோவி லுக்கு
ஏகிட வேண்டும்? நேர்த்தி
காணிக்கை கொடுத்தேன் பாவக்
கணக்குகள் தீர்க்க வேண்டும்?
ஏழைகள் உழைப்போர் வாட
இமயமாய்ப் பாவக் காசை
சேர்த்தந்தத் தோசம் போக்க
தேர் செய்தேன் கொடுக்க வேண்டும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply