கனவுகளின் எல்லையில் – வே.ஜெகரூபன்

தங்களின் கவிதை நூலை ‘அன்பளிப்பு செய்வதற்கு’ முதலில் நன்றி. ஏனெனில் நான் பணம்

கொடுத்து வாங்கிய ஒரேயொரு ஈழத்துக்கவிதைநூல் ச.வே.பஞ்சாட்சரம் கவிதைகள் (15/09/2007)

இது தான் இன்று கவிதையின் உண்மைநிலை! யார் இந்தக் கவிதை நூல்களை விரும்பிப்

படிக்கிறார்கள்?

கவிதை பற்றிய ஆர்வத்தை ச.வே. பஞ்சாட்சரம் எனக்கு 1986-90 வரையான காலப்பகுதியில்

ஏற்படுத்திய வேளையில் ஒரு நாளுக்கு ஒரு கவிதை எழுதி (வருடத்தில் 365) அவற்றில் 100

கவிதைகளை ச.வே..ப அவர்களைக் கொண்டு தெரிவு செய்து வருடத்திற்கு ஒரு கவிதைநூல் (100 கவிதைகள்

அடங்கியது) வெளியிட எண்ணிய பாடசாலை வாழ்க்கையை இப்பொழுது எண்ணினால் வெட்கம் பிடுங்கித்

தின்கிறது.

இன்று ‘கவிஞன்’ தொலைந்து நல்ல ரசிகனாவது மிஞ்சியிருக்க வேண்டுமென நினைக்குமளவுக்கு

மருத்துவக்கல்வியில் மூழ்கியாயிற்று. சினிமாப்பாடல், வரிகளை (அவை உச்சரிக்கக் கூடியதாக

கேட்டால்) அவ்வப்போது சீர்தூங்கிப் பார்ப்பதோடு சரி ‘கனவுகளின் எல்லைக்கு’ ஒரு

விமர்சனம் எழுத இந்தளவு முன்னுரையும் தேவையாயிற்று! தளம் வேறுபடுகின்ற போது பார்வை

வேறுபடுமே! எப்பொழுதுமே தாஜ்மகால், ஈபில்கோபுரம் போன்றவற்றை ஒரு

திசையிலிருந்தே பார்க்கிறோம். இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் சிலவேளைகளில்

‘தாஜ்மகாலை’ ஏற்றுக்கொள்ள முடியாது போய்விடுவோம்!

இந்தக் கவிதைகள் எல்லாவற்றிலும் உள்ள பொதுத்தன்மை ‘மரபு’ தான்

பாடுபொருளாயிருந்தாலென்ன சந்தமாயிருந்தாலென்ன எல்லாம் ‘பழசு’ தான். கம்பன் –

பாரதி – பாரதிதாசன் என்று ஒரு வரைபு கீறும் போது பாரதிதாசனின் கோட்டை நீட்டினால்

அதில் ஜெயசீலன் விலகல் இல்லாமல் அமையக்கூடும். இந்த எளிய பௌதீகம் புரியும் என்று

நினைக்கின்றேன் ஏனெனில் இன்று கவிதை எழுதுபவர்களில் உதாரணமாக வைரமுத்து,

வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றோர் (இவர்களை கவிஞர்கள் அல்ல என வாதிடுவோரும் உள்ளனர்)

தத்தமது களங்களிலிருந்து எழுதும்போது ‘வித்தியாசமாகப் படைக்கு வேண்டும்’ என்பதற்காக

எதையெதையோ எல்லாம் எழுதுகிறார்கள.; அப்படியான ‘புதுமுயற்சி’ ஒன்றையும் நான் இதில்

காணவில்லை. (கனவுகளின் எல்லையில் என்றால் பழைய பூவரசும் கதியாலும் தான் நிற்குமோ

என்னவோ)

அடிப்பிடித்துப் போனது அழகு, ஞானம் பரப்பும் மணல், ‘வெறுமை படர்ந்த கடல்’ ‘இயமனுக்கு

இன்று நன்றி’ ‘காலத்தைப் பதிந்தே செல்’ ‘அதிகாலை அழகு அருமை’, ‘இமைப்பொழுதும்

நீங்காமல் இரு’, என்று ஒவ்வொரு சீரையும் சீர் தூக்கிப் பார்க்க அட அழகாய்த்தான்

இருக்கிறது! இது ஒவ்வொன்றும் வௌ;வேறு கவிதைகளின் வரிகள் என்றாலும் ஏதோ ஒரு

பொதுத்தன்மை மெல்லிய நூலிழையால் தெரிகிறது.

ஓர் ஆன்மீக வாடை இன்று வீசத் தொடங்கியுள்ளது. பாலகுமாரன் – இளையராஜா – ரஜனிகாந் –

நந்தி எனச்சிலரின் எழுத்தில் இதன் தாக்கத்தை அறியலாம். அதனால்தான் என்னவோ ‘கனவுகளின்

எல்லையில்’ ஆன்மீகம் பேசப்படுகிறது. ‘இன்றுன்னில் இலயித்த பின்னர்’ என்று

கடைசிப்பக்கத்தில் கூறுவதும் அதைத் தான் என்பதும் புரிகிறது. ஆனால் ஒன்று இந்த ஆன்மீகம்

பேசுபவர்களுடன் எனக்கு ஒரு முரண்பாடு. இந்த மக்கள் கூட்டத்தில் எத்தனை வீதம் அதனை விளங்கிக்

கொள்வதும் – சமூக பொருளாதார – கல்வி நிலையிலிருக்கிறது.? அப்படி ஆன்மீகத்தை பேச

முற்பட்டாலும் ‘மெய்பொருளை’ விட்டுவிட்டு சடங்கு சம்பிரதாயம் என இலக்கே திரும்பி

விடுகிறது.

என்னைப் பொறுத்தவரை ஜெயசீலன் ஒரு கவியரங்கக் கவிஞன். பத்திரிகையிலோ நூலிலோ

இப்படியான கவிதை ஒன்றை வாசிப்பதை விட கவியரங்கில் சந்தத்தோடு ஏறிஇறங்கிக் கேட்க

நன்றாயிருக்கும் சில புதுக்கவிதைகள் ஹைகூ அரைப்பக் கவிதைகள் வாசிக்க மூஞ்சியில்

அடிப்பதைப்போல இருக்கும். அப்படியானவையே வாசிக்க நல்லது என்பது என் கருத்து மற்றபடி

இந்த கவிதைகளை ‘ரேப்’ பண்ணி கேட்க நல்லாயிருக்கும்!

சினிமா இன்று ஆதிக்கம் பெற்றுவிட்டது. நல்ல கவிதைகள் செத்துவருகின்றன. இன்றைய

இளங்கவிஞர்கள் நல்லகவிதையை எழுதுவதோடு மட்டும் நில்லாமல் அதனை மக்களிடம் எடுத்துச்

செல்லவேண்டியும் உள்ளது. கவிதை நூல் என்பது இன்று ‘ஆவணப்படுத்தல்’ என்பதோடு சரி.

ஜெயசீலன் போன்றோர் இனி வேறு ஏதாவது செய்ய வேண்டும். நெடுக குளோரோகுயினையும்

அமொக்சிசிலினையும் கொடுத்துக் கொண்டிருந்தால் நாம் தூக்கி யெறியப்பட்டு விடுவோம்!

ஜெயசீலன் தொலைந்து போகக்கூடாது என்பது என் அவா. நல்லூர் சங்கிலியனின் இல்லத்தின்

திண்ணையிலிருந்து எழுந்த பறையொலி கணணியுகத்தில் புதிய செய்திகள் சொல்லவேண்டும்.

Leave a Reply