வானம் தொடும்படி மண்ணில் வளர் நகர்
மாயும்; சுடுகாடாய் மாறும் – மக்கள்
மறைவர்; இடுகாடு சூழும். -இந்த
ஈனம் தொடர்ந்திடும்…ஏவு கணைகள்
இன்றை வரலாற்றை மாற்றும் – இப்போ
எமனுக்குத் தானே கொண் டாட்டம்!
எத்தனை நாட்களாய்க் கட்டி வளர்த்திட்ட
எல்லாம்… தகர்ந்தது தூளாய் – அங்கங்-
கிருந்தோர் தொலைந்தரோ பாழாய்? – இந்த
‘யுத்த சன்னத்தர்கள்’ வீம்புக்கு ஆயிரம்
யுத்திகளோ டெழும் போதாய் – எங்கும்
ஊழி பொசுக்குது தீயாய்.
வேடர் களாய்த் தலைவர்கள் வெறிகொண்டு
வேட்டைகள் ஆட நிலங்கள் – சிதை
மேடுகள் ஆச்சு; தலங்கள், – நகர்,
வீடு,வயல்கள், வனங்கள், எரிந்தன.
வெந்து கருகும் இனங்கள். – இதை
வேடிக்கை பார்க்கும், மதங்கள்.
சீறிச் சிதைக்கிற ஏவு கணைகட்கு
‘சின்னன் பெரிதா’ தெரியும்? – ஏழை
செல்வனென்றா பார்த்தறியும்? – அவை
வேறு படுத்தாது வேர்முதல் ‘மானுட
விருட்சத்தையே’ பேர்த்தெறியும் – எங்கும்
வெற்றிடம் தானோ விளையும்?
ஆற்றல் வளர்ந்தது, அறிவு வளர்ந்தது,
அன்பு வளரலை ஏனோ? -யாரும்
ஆணவம் கொண்டதாற் தானோ? – “கல்வி
ஏற்றம் தரும்” என்றோம்; இன்று அழிவையே
எங்கும் விதைத்திட லாமோ? – அறம்
இற்றததன் பணி… வீணோ?
‘மானுட நேசம்’, ‘ மனிதத்தின் மாண்புகள்’,
‘வாழும் உரிமைகள்’, என்று – “யுத்தம்
வந்திடக் கூடாது…சென்று – தேய
வேணும்” என்றே… அமைதிக்கு முயன்றவர்
வெற்றுக் கடதாசி ஆனார் – யுத்தம்
விரியவே ஊமையாய்ப் போனார்.
‘உலக அமைதி’, நல் ‘உண்மைச் சமாதானம்’,
உயிர்களைக் காத்திடும் பண்பு, -தோற்று
ஒளியுதா? வாடுது அன்பு! – இந்தக்
கலகத்திடை கோடிக் கோடிக் கணக்கானோர்
கலங்கித் துடிப்பது கண்டு – எந்தக்
கடவுளும் காக்கலை வந்து!
“பாடி முடிக்க முடியாது” வையகம்
பட்டிடும் இன்றைய பாட்டை – வாய்
பார்க்கவா கூடும் இக் கேட்டை? – பலி
ஆடுகளாய்ப் புவி மாதரை மாற்றி
அரசியல் செய்வோரின் சேட்டை – தீர்க்க
ஆரிடம் உள்ளது சாட்டை?





