காலமொன் றிருக்குது.
கடவுள் தீர்ப் பிருக்குது.
வாலையாட்டும் தீமைகள்
மாய்ந்த மெய்யிருக்குது.
போலி வேசம் பொய்மைகள்
போர்க்கு நின்ற போதிலும்
வேசப் போலிப் பொய்யினை
வீழ்த்தும் நியாயமுள்ளது.
இந்த வையகத்திலே
எவையும் காரணத்துடன்
வந்து போவதுண்மையாம்!
மண்ணில் மெய்யர் பொய்யரின்
தந்திரம், நிஜக்குணம்
சாற்றுதற் கியற்கையின்
சிந்தனை… முயலுமாம்.
தினமும் லீலை செய்யுமாம்.
தீமை, கேடு செய்பவர்,
தீயவை நினைப்பவர்,
வாழ்தல் கண்டாற்றாமையில்
வஞ்சகம் புரிந்துமே
வீழ்த்த எண்ணுவோர், மன
விசம் படைத்தவர்…கதை
வாகை சூடி வென்றதாய்
மண்ணிலில்லையே…நினை!
வந்த தூற்றல் எள்ளலை,
மனம் குழப்பும் சொற்களை,
நிந்தனையை எண்ணியே
நெஞ்சிருண்டு சோர்ந்துபோய்
அந்தரித்தல் தீர்விலை;
அவை முன்… வாழ்ந்து காட்டலே
தந்திடும் பலம்! பகைச்
சந்தோசம் கெடுத்திடும்!
உண்மை என்றும் வென்றிடும்.
உயிர்ப்பொடும் ஒளிர்ந்திடும்.
மண்ணில் என்றுமே அறம்
வாழும்: நன்மை செய்திடில்…
உண்டு நற்பலன்; இடர்
உள் நினைப்பவர் திடம்
துண்டுபட்டுத் தண்டனை
தோன்றும்; நீதி வெல்லுமாம்!
நாகரீகம் ஓங்கினும்,
நாற்திசை பொன்னாகினும்,
பேரறிவு கூடினும்,
பெரிய வசதி தோன்றினும்,
வீரமும் பலங்களும்
விஞ்சினும்…, அறம், நிஜம்
சேர்ந்திடாத ‘யாவுமே’
ஜெயிப்பதில்லை காண் நிதம்!





