எங்கள் தமிழின் மகிமை; – அதன்
இனிமை, கனிவு, அருமை, பெருமை;
எங்கள் தமிழ் ஆழ நீளம்; – அதன்
இயல்பு, செழிப்பு, புதுமை புகுந்தும்
மங்காது பழமையும் காக்கும் – குணம்;
வரலாற்றுக் கேற்ப தனைமாற்றும் பண்பு;
இங்கிவை பற்றி உலகம் – நிதம்
எண்ணி வியக்கும். எமக்கேன் தயக்கம்?
உலகில் முதன்முதல் தோன்றி – வந்த
உன்னத மொழிகளில் தமிழ் மூத்ததென்று,
உலகில் இன்றும் இளமை குன்றா – தாளும்
உணர்வு மிகு மொழி தமிழே தானென்று,
உலகில் பல மூப்பு மொழிகள் – வடி
வொழுங்கு சிதைந்து வழக்கொழிந்தாலும்
உலகின் எண் திக்கும் பரந்து – இன்றும்
உயிர்ப்புடன் வாழும் மொழி… தமிழ்… வென்று!
யாரும் தமிழ்தன்னைக் காக்கத் – தேவை
இல்லை; அது தன்னைக் காத்து வளர்க்கும்.
ஊரின் உலகத்தின் மாற்றம் – யாவும்
உள்வாங்கித் தன்னைப் புதுப்பித் துயிர்க்கும்.
பேரைப் பெருமையை மீட்க – கவிப்
பெரியோர், அறிஞரை உருவாக்கி ஓங்கும்.
கூர்த்து இனும் கோடி ஆண்டு – இந்தக்
குவலயம் தன்னில் தமிழ் வாகை சூடும்!





