பொய்களைக் கண்டு பயந்து – அதைப்
புறஞ் சொல்லுவாரென் றதிர்ந்து.
நைந்து மனங்கள் நலிந்து – ஊரில்
நாலுபேரின் முன் குனிந்து
செய்வதறியாதிருந்து – வாழ்தல்
தீது; இதற்கு மருந்து
மெய்களைச் சொல்லி முயன்று – தன்
முனைப்போ டெழுவாய் நிமிர்ந்து!
இல்லாத பொல்லாத தெல்லாம் -நிகழ்ந்
திட்டதெனச் சொன்ன பொய்க்காய்
மல்லுக் கட்டியேன் இருப்பாய்? – மெய்
மனமறியும்; ஏன் தவிப்பாய்?
சொல்லட்டும் ஆயிரம் வாய்கள் – நீயோ
சொல்; அவை பொய்யென்றுமே செல்!
“இல்லை மெய்” என்றிடின் ஊர்கள் -கண்டும்
ஏற்காதவறூறை நீ வெல்!
“பொய்கள் குரலை உயர்த்தும் – அவை
புகழைப் பெருமையைத் தாக்கும்
வையகம் எவ்விதம் பார்க்கும்? -சனம்
மனதில் எதனை நினைக்கும்?
ஐயகோ” என்றிடியாதே – மெய்யின்
ஆற்றல் சொல்லத் தயங்காதே
தெய்வம் தண்டிக்கும் அஞ்சாதே – பொய்மைச்
செய்கையினை மன்னிக்காதே!
பொய்கட்கு ஆயுளோ கொஞ்சம் – சொல்லும்
புனைவதன் சாயம் வெளுக்கும்.
வையகம் தானாய் விளங்கும் – போலி
வார்த்தைக்கா அர்த்தம் இருக்கும்?
மெய்வழி சென்றிடும் உன்முன் – பொய்
வேசங்கள் தானாய் உதிரும்.
பொய்களைக் காலமும் எள்ளும் – சொன்ன
பொய்யரை மானுடம் தள்ளும்!





