மிஞ்சியது ஐயமும் அச்சமும்.

பூமியைப் பொத்தல் போட்டன குண்டுகள்.
போய் ‘அடிமுடி’ தேடின வேட்டுகள்.
பாதாள லோகத் துள்ளே…பதுங்கிய
பலரையும் தேடித் தின்றது ஏவு கணை.
பாடு பட்டவர், பகலிர வாகத் தம்
பணம் உழைப்பில் செழித்த பெருங்குடி,
வாழும்… மாநகர்களைத் தூள் தூளென
வதைத்த ழித்தன ‘ட்ரோன்கள்’, விமானங்கள்!

மானுடத்தின் அறிவியற் சாதனை,
மண்ணைச் சொர்க்கமாய் மாற்றிய கைப்பலம்,
யாவையும்… ஏதோ அற்ப காரணத்திற்காய்
மனித விழுமியம், இயற்கை அறம், சட்டம்,
ஈவிரக்கம், எதையும் பாராமலே…
“எவர்கள் கேட்பார்கள்” எனும் இறுமாப்பிலே…
ஏவி நவீன ‘ ஆயுதப் பேய்களால்’
எல்லோரும் ஊழிக் கூத்துகள் ஆடுறார்!

ஆயிரம் மைல் தொலைவினைத் தாண்டியே
அனாயசமாக அடுத்தடுத்து வந்து
மாய்க்கும் நித்தம் கணைகள் வரிசையாய்!
வட்டமிட்டும் சுழன்றும் ‘ ‘மிகையொலித்
தாரை’ விமானங்கள், விமானந் தாங்கிகள், கணம்
ஏவும் கணைகள் எண்திக்கும் சென்றிடும்.
எரித்துத் திக்குத் திசைகளைக் கொன்றிடும்.

சும்மா விளையாட்டாய்த் தொடங்கி, “மிரட்டினால்
சோர்ந்து போகும்” என நினைத்த சமர்
தம் பலங்களைக் காட்டிட.. எல்லைகள்
தாண்டி எங்கெங்கோ… தீயினை மூட்டுது.
வெம்மை கூடிப் பகைமை வலுக்குது.
விரைவில் நில்லாது நீண்டு…உலகையே
வம்பாய் அழித்துத் துடைக்கவா போகுது?
மனங்களில் ஐயம் அச்சமே மிஞ்சுது!

Posted in கவிதைகள் | Comments Off on மிஞ்சியது ஐயமும் அச்சமும்.

நரகமாகும் நகர்கள்.

எங்கும் அழிவுகள்.
எங்கெங்கும் சிதைவுகள்.
எங்கும் புகைமூட்டம்.
எங்கெங்கும் தீப்பரவல்.
இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாகப்…
பொங்கி வெடித்துப் பொசுக்கிடுது போர்க்கணைகள்.
மாறிமாறி எல்லைமீறி
விமானங்கள், ‘ட்ரோன்’ வகைகள்,
ஆழ்கடற் பெருங்கலங்கள்,
நீர்மூழ்கிகள், சரியாய்
ஏவுகிற பீச்சுகிற குண்டு,வேட்டால்
எரிமலைகள்
வெடித்திடுது குடிமனைக்குள்.
இந்தப் பேரிரைச்சலுக்குள்
இடைவிடாது போர்ச் ‘சைரன்’ அலறிடுது.
வானெங்கும்
தொடர்ந்து வரும் ‘குண்டொளிகள்’
கூற்றின் கைக் கொள்ளியாச்சு.
வெடியோசை மேளச் சமாக்களாக…
நடுநடுங்கி
உசிரைக் கரங்களிலே பிடித்துத் துடித்து முழுப்
பசியோ டலைந்திருக்கும்
பச்சைக் குழந்தைகளை…
“ஏனெதற்கு இந்த வெறியாட்டு”
என அறியா அப்
பாவிகளை…யாரோ சிலரின் ‘அதிகார
போதைக்காய்’; சேர்த்த பொருள் செல்வம் பறிகொடுத்து
வாழத் தவிப்போரை…
யாரெவர்கள் தாம் நினைத்தார்?
சொர்க்கா புரிகளைச்
சுடுகாட்டு மேடாக்கிக்
கறுவுவதை அன்றி
என்ன இலாபம் ‘இவர்’ கண்டார்?
ஓர்நொடியில் நகரை
நரகமென மாற்றுகிற
போரில் யார் எப்போ என்ன பலன்பெற்றார்?
சிதைவுகளுள்… சிதைந்த சோதரரை
மீட்டெடுக்கும்
எதுவும் அறியாதவரும் நாளை சிதைபடலாம்.
இடிந்த பெருநகரின்
இடிபாடுகளுள் யாரும்
கிடந்திடலாம்;
‘அவர்க்கெல்லாம்’
போர்க்கான காரணங்கள்
‘விடுகதைகள்’ அல்ல!
யாவையையும் கருவறுக்கும்
தொடர்கதைகள் ஆச்சே!
தொடர்ந்தும் போர் அரக்கன்
மடியாமல் திமிறி நின்றால்
மண்ணிலெது மிஞ்சிடுமே?
யார் அழிந்தால் என்ன?
யார் சிதைந்தால் என்ன?
பேர் புகழும் கொள்கைகளும் பெரிதென்று நிற்பவரால்
சூனியந்தான் தோன்றிடுதே!
சுதந்திரமும் மாய்ந்திடுதே!

Posted in கவிதைகள் | Comments Off on நரகமாகும் நகர்கள்.

நடு நிலைமை

வாழ்க்கையெனும் பட்டத்தின் வாலினையும்
அதை ஏற்றும்
நூலினையும் அறுத்துவிட்டு
நோண்டுது ‘நிகழ்காலம்’.
என்செய்யும் வாழ்க்கைப் பட்டம்?
இடர்க்காற்றில், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நடு நிலைமை

தமிழ் வாகை சூடும்.

எங்கள் தமிழின் மகிமை; – அதன்
இனிமை, கனிவு, அருமை, பெருமை;
எங்கள் தமிழ் ஆழ நீளம்; – அதன்
இயல்பு, செழிப்பு, புதுமை புகுந்தும்
மங்காது பழமையும் காக்கும் – குணம்;
வரலாற்றுக் கேற்ப தனைமாற்றும் பண்பு; Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தமிழ் வாகை சூடும்.

எவரிருப்பார்?

விடிவொன்று வருமென்று மனமிருக்கும் – அது
விளைவென்ன தருமென்று இனமிருக்கும்.
முடியாதோ இடரென்று சனமிருக்கும் -யாரும்
முயலார்கள்; இழிவோடே நனவிருக்கும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எவரிருப்பார்?

வாழ்வின் யதார்த்தம்.

அடுத்த கணமென்ன ஆகுமெனக்
கண்டறிய
முடியாத வாழ்வினிலே…
மோதி அடிபட்டு,
ஏதேதோ ஏக்கங்கள் தீர்க்கும்
அவா… குறையாப் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வாழ்வின் யதார்த்தம்.

வலியது விதி

எப்படித்தான் எமைப்பாது காத்த போதும்
எமனிடத்தில் இருந்தெவரும் இலகு வாகத்
தப்பிவிட முடியாது; தருணம் வந்தால்
சரியாக நமைக்காத்தே நடந்த போதும்…
எப்படியோ ஏதோ ஓர் ரூபத் தோடே
எமன்வருவான்; பிடர்பிடித்துத் தள்ளிச் சாவு Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வலியது விதி

கலிகாலம்

அன்பு, பாசம், எல்லா அயல் உயிர்களிலுமே
மென்மை மிகு நேசம்,
கருணை, ஜீவ காருண்யம்,
தீயவை சிந்திக்காச் சிந்தை,
பிறர்க்கேதும்
தீங்கு விளைவிக்காச் செயல்கள், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கலிகாலம்

காலமும் நேரமும்

காலம் உனக்குச் சாதகமாய் இருக்கையிலே…
காலத்தின் காற்றுந்தன்
பக்கம் அடிக்கையிலே…
காலத்திற் குன்னால் இலாபம் கிடைக்கையிலே…
காலத்திற் குன்னுடைய தேவை இருக்கையிலே…
இந்தக் கணம், அடுத்த கணம், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காலமும் நேரமும்

வாழ்வின் கேள்விகள்

பாதை நூறு கண்களின் முன் விரிந்து உள்ளது. -அதில்
பயணம் எதால் போகவேணும்? மனம் மயங்குது.
மாதிரியாய் வாழ்ந்தவரை மனது தேடுது – சென்று
வாழ்வமோ? யாம் மாய்வமோ? யார் யாரைக் கேட்பது? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வாழ்வின் கேள்விகள்

ஆகும் ஊழும் போகும் ஊழும்

கடந்துகொண் டிருக்கின்ற
ஒவ்வொரு கணங்களிலும்
நடக்கவேண்டிய தென்னென்று
நம்விதியோ… தலையெழுத்தோ…
காலமோ… நேரமோ…
கடவுளோ…வினைப்பயனோ… Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஆகும் ஊழும் போகும் ஊழும்

செய்…வா!

ஆயிரம் தடைகள் சூழ்ந்து
அடக்கிடும் போதும்…நூறு
ஆயிரம் இடர்கள் சீண்டி
அழித்திட முயலும் போதும்…
பாய்ந்ததை எதிர்க்கும் நெஞ்சும்,
பயப்படாக் கை, கால், கண்ணும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on செய்…வா!

இயற்கை நியதி

தெருவெலாம் துன்பம் திரளுது எனினும்
திசைகளிற் பூத்தன மலர்கள்.
தினந்தினம் வெய்யில் தீய்த்திடும் போதும்
செடிகளில் தோன்றின தளிர்கள்.
பெருமழை வெள்ளம் மூழ்கடித் தாலும்
பின் எழும் புதுப்புதுப் பயிர்கள். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இயற்கை நியதி

புறம்போல் அகமில்லை.

மனிதர்கள் மனிதர்களாய் இல்லை
இந்த நாட்களிலே!
மனிதர்கள், சராசரி
மனிதக் குணங்களுடன்
புறத்திலும் அகத்திலும்
புதிர்ப்போலி வேசங்கள் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புறம்போல் அகமில்லை.

இடர் மேலாண்மை

‘முன்னாயத் தம்’ என்று முறைக்கு முறைகதைத்து,
என்னென் றியற்கையிட- ரிருந்துதப்புவ தென்றாய்ந்து,
என்னென் றனர்த்தத்தைத் தணிப்பதெனத் திட்டமிட்டு,
என்னென் றிடர்க்குமுகம் கொடுப்பதெனக் கற்பித்து,
ஊரினைக் காப்பதற்கு ஒத்திகை களும்பார்த்து,
ஆயிரம் கதையளந்து, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இடர் மேலாண்மை