உணர்வில் கலந்த நல்லை.

நல்லூர் கொடியேறி விட்டால்
அதன் நாற்திசையும்
பல்வேறு கொண்டாட்டம்.
பக்தித் திருவிழாக்கள்.
அவற்றின் விசேசம்,
அவற்றின் தனித்துவம்,
அவற்றின் அழகு,
அவற்றினது நேர்த்தி,
அவற்றினான்ம அதிர்வு,
அவற்றின் பரவசம்,
இவைதாண்டி எத்தனையோ…
வெளிவீதியைச் சுற்றி
நடந்தேறும்;
எல்லாமும் நன்றாய்த்தான் நிகழ்ந்தேறும்!
தடைகள் தகரும்.
சந்தேகங்கள் விலகும்.
நடக்க வேண்டியவை நடக்கும்.
எதுவரினும்
நடக்க வேண்டியது நடக்கும்.
விழா நாளில்
கடைதெருவைச் சுற்றிக் களியாட்டம்.
வியாபாரம்.
எப்படிப் பிழைக்கலாம் எனும்போட்டி.
இதற்குள்ளும்
எப்படி உழைக்கலாம் எனும்கேள்வி.
பேர் புகழை
எப்படிப் பெருக்கலாம் எனும் வேள்வி.
விளம்பரங்கள்
எப்படிப் பெறலாம் எனும்சோலி.
மண்டபங்கள்
எங்கும் பெருங் கச்சேரி.
அவற்றில் ஈடில் முருக துதி.
எங்குமவன் புகழ்ப் பஜனை.
இசை, நடனம், பேச்சாலே
மனக்குறையைச் சொல்லல்.
மண்டபப் படிகளிலே
தினம் பிரசாதமிடல்.
தண்ணீர்ப் பந்தல்கள்
தனிலே அடியவர்க்குத் தாகசாந்தி.
அன்னதானம்
தினமும் வழங்கும் திருமடங்களில் குறையா
அவியல்;
‘செலவு’ பற்றி அலட்டாது
குவிகின்ற நேர்த்தி.
குகனுக்கு அர்ப்பணமாய்
கவிப்பொழிவு, காவடிகள்,
அங்கப் பிரதட்டை,
கற்பூரச் சட்டிகள் காவுதல்,
கலையாடல்,
‘அற்புதன்’ அவன்பின் அடியளிப்பு,
பாற்செம்பு
எடுத்தல், பகலிரவு என்றிராமல்
விரதங்கள்
பிடித்தல், பிறநாடு ஊர்களிலிருந்து வந்து
வடமிழுத்துக் கொம்புகாவி…
எப்படிப் போனதெனப்
புரியாத வாறு போனதிந்தப் பொன்நாட்கள்!

இருக்குதோ இறைசக்தி இல்லையோ…
கந்தவேலன்
இருக்கிறானோ இல்லையோ…
“இருக்கிறான்” எனும் முடிவில்…
இருக்கெமக்கும் புரியாத சக்தி
எனும் சிந்தனையில்…
பெருந்தொண்டு, சேவை,
பிரதிபலன் பாராத
நிதிவழங்கல்,
காணிக்கை நிறையக் கொடுத்தல்,
என…
வெவ்வேறு ஆட்கள்
வெவ்வேறு செயற்பாட்டில்
தெய்வஅருள் தேடித் திளைப்பார்கள்!
‘நல்லூரான்’
வேலாய், அறுமுகனாய்,
முத்துக் குமரனுமாய்த்,
தான்வருவான்; தங்க, ஐம்பொன் சிலையாய்!
அவன்
நேரில் சிரிப்பதில்லை.
நின்று கதைப்பதில்லை.
யாரையும் வாழ்த்தவில்லை.
தண்டித் ததுவுமில்லை.
யாருக்கும் கையால் எடுத்தேதும் கொடுத்ததில்லை.
ஆனால்… அவன் அவர்கள்
‘அகத்தில்’
சிரிப்பதனால்….
ஆமாம்… அவன் அவர்கள் கனவில் கதைப்பதனால்…
ஆரும் …குகனை அருகில் உணர்வதனால்…
ஏதோ வழியிலவன் எப்படியோ
‘அரூபமாகப்’
பேசி மகிழ்வதனால்,
பிழையைத் திருத்துவதால்,
ஆசி வழங்குவதால்,
ஆதரவு நல்குவதால்,
சொல்ல முடியாச் சுமையை இறக்குவதால்,
அல்லல் அறுப்பதனால்,
ஆனந்தம் ஆக்குவதால்,
வல்லமையும் கேட்ட வரங்களும் கொடுப்பதனால்,
உள், வெளி, நோய் வலிக்கு…
ஒளடதம் ஒத்தடமும்
அள்ளி உவந்து வற்றா
அருளை வழங்குவதால்,
எல்லோரும் திருவிழாவில் ஏங்கித் திரிந்திருந்தார்.
பல்வேறு துயர்தீரும் எனப்பார்த் திருக்கின்றார்.
நெஞ்சுள்ளே நிம்மதி நிறையுமென நம்பித்
தஞ்சம் அடைகின்றார்.
தம்தம் தகுதிக்கு
ஏற்ற வழிகளிலே இறைஞ்சுகிறார்.

“நல்லைவேலன்
தேற்றித் துணைநிற்பான்.
தேவைகளைத் தீர்த்துவைப்பான்.
கைவிடான்” என்ற
காலகால நம்பிக்கை
உய்யவைக்கும்;
‘நல்லூர்’ எம்
உணர்வோடு ஒன்றி வாழும்!

Posted in கவிதைகள் | Comments Off on உணர்வில் கலந்த நல்லை.

காவல் தெய்வம்

காலனாக வந்து மண்ணில் வாழுகின்ற வைரவர்.
காவல் நின்று ஊரை வாழ்த்தும் ‘மண்டையோட்டு மாலையர்’.
சூலம் வீசி தீ நுதல்களாலே தீமை தீய்ப்பவர்.
தொல்லை செய்யும் மாய மந்திரம் துரத்திச் சாய்ப்பவர்.

நாயிலேறி நாலுதிக்கும் நாளும் சுற்றி மீளுவார்.
நல்லவர்களை மிரட்டும் பேய்கள் யாவும் ஓட்டுவார்.
கோவில் தேவையில்லை; சந்தி, எல்லையோரம் வாழுவார்.
குற்றம், பாவம் செய்பவர்க்குக் குட்டி…நீதி நாட்டுவார்.

ஞானவேலுக் கீடுகாண்…நிமிர்ந்து நிற்கும் சூலமும்.
நாட்டில் அந்நியம் படிந்த காலம்… வாழ்ந்த கூர் முகம்.
யாரும் மந்திரங்கள் சொல்லிடாது, நேரும் போதிலும்,
யாவும் நல்கும் சூலம்; வேலுடன் இணைந்த ஆயுதம்!

‘நல்லைக் கந்த சாமியாரின்’ காவல் தெய்வம் வைரவர்.
நஷ்டம், இன்னல் சூழ்ந்திடாமல் நன்மை நல்கு கின்றவர்.
நல்லையில் எடுக்கும் முடிவை இறுதி செய்வார் வாசலில்!
நனவில் கனவில் வந்து ஞானம் சொல்வார்; அன்பர் காதினில்!

நல்லை வைரவர்க்கே நாளும் கடைசிப் பூசை, தீபமும்.
‘நல்விழாவின் ‘முன்-பின்’ அன்னார் தருவார் ஆசி நேரிலும்.
‘வல்ல வடுகர்’ வாசல் அமர்; வருடும் தென்றல் நாள்தொறும்…
மனதின் சஞ்சலம் துடைத்துச்… ‘சக்தி ஏற்றும்’…தரும் இதம்!
.
சுட்டு, வடை மாலை கட்டி, சூட்டிச் ‘சூல பாணியை’
தொழுதுமே துதித்துப் பாடு தோத்திரங்கள்; வேதனை-
எட்ட ஓடும், வீரம் ஓங்கும், வெற்றி சூழும், “நீ துணை”
என்று நேர்ந் தடிப்பாய் தேங்காய்; சிதறும் சூழும் வல்வினை!

Posted in கவிதைகள் | Comments Off on காவல் தெய்வம்

கண் பெற்ற பேறு!

இந்த எழிலினை எங்குமே காண ஏலா-
திந்த அழகைவே றெவருமே
காட்ட ஏலாது.
இந்த வைபோகம் வேறெங்கும் கிடையாது.
இந்த ஆனந்தம் எல்லோர்க்கும் எட்டாது.
இந்தப் பெரும்பேறு ஏற்கார்க்குக் கிட்டாது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கண் பெற்ற பேறு!

குலவு நிதம்.

அழகும் அறிவும் அறமும் மறமும்
அருளும் நிறையும் அலங்காரா.
அவுணர் அழிய அமரர் நிமிர
அதிகம் உதவும் பெருமானே.
விழியில் கருணை வழிய, இதழில்
மிருது வசனம் பொழிவோனே. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on குலவு நிதம்.

எம்மை எமக்குணர்த்தும் விழா.

சனசமுத்திரத் திடையில் தவழ்ந்துவந்தான்
தேரேறி
கனவான் என நல்லை ஆறுகமுகக் கந்தன்.
இந்த சன சமுத்திரத்தில்,
இந்த மக்கள் வெள்ளத்தில்,
சிந்தை இழந்து சிலிர்த்தபடி Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எம்மை எமக்குணர்த்தும் விழா.

தொழுதோம் உன்னை நம்பியே!

எங்கள் குறை கண்ணில் படவில்லையா? – அட
எங்கள் குரல் காதில் விழவில்லையா
எங்கள் வேண்டுதலுக்குப் பதிலில்லையா? –ஐயா
எங்கள் இடர் கண்டுமின்னும் மெளனமா? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தொழுதோம் உன்னை நம்பியே!

நிழலாய்த் தொடரு!

யாரா யினிலும் அவர் அண் டிவர
சாதா ரணமாய்த் தழுவும் தலைவா!
வேரா கஎமக் குதவும் அரனே
வேலா பெருநல் லைகுகா சரணம்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நிழலாய்த் தொடரு!

தேரிலேறி தீமை தீய்ப்பான்

‘ஆறுமுகர்’ தேரிலேறி ஆடி வந்திடும் – காலை
அதிசயங்கள், அற்புதங்கள் கோடி பொங்கிடும்.
வீறுகொண் டாக்ரோஷமோடு சஞ்சரித்திடும் – வேலன்
விழிப்பிளம்பு தீமைகளை சங்கரித்திடும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தேரிலேறி தீமை தீய்ப்பான்

நல்லூரானை நாடி.

எங்கிருந்து இங்கு சனம் வந்து சேர்ந்தது? – அட
எள்ளுவிழ இடமிலாது எவ்வாறு சூழ்ந்தது?
எங்கிருந்து எந்தக் காந்தம் ஈர்த்திழுக்குது? – பக்தர்
இதயம் நல்லை அறுமுகனைத் தேடித் திரழுது!

யாரும் சேர்த்திடாது வந்திணைந்த கூட்டமாம் – ஏதும்
யாசகங்கள் வாங்கி சேர்ந்திடாதிந் நாட்டமாம்.
பேர் புகழிற்காக ஏங்கிடாத தேட்டமாம்- நல்லை
பெரியவன் தேரேறக் கண்டால்… ஆட்டம் பாட்டமாம்.

உடல் முழுக்க அலகு குத்தி வலி பொறுத்துமே -பறவை,
தூக்குக் காவடிகள், வந்து வியக்க வைக்குமே
அட இவரின் அன்பிற் கீடேதுமில்லையே – நல்லை
அரனின் வெறியர் அவனைவிட்ட கன்றதில்லையே!

தீயும் எரியும் கொடிய வெய்யில் எங்கும் தீய்க்கையில் – நேர்த்தி
தீர்த்துருண்டு காவடிகள் ஆடுவோர்களின்
காயம் அறி மாறும்…கந்தன் கருணைப் பார்வையில் – காலன்
கயிறுகூட அறுந்து போகும் வேலின் கூர்மையில்!

வந்த பக்தர் உளப்பசியைக் முருகன் போக்குவான் – அவர்
வயிற்றுப் பசியை அன்னதான மிடுவோர் ஆற்றுவார்.
நொந்தவர்கள் வந்து நெஞ்சமுருகி நேருவார் -அவர்
நோ வலியைத் துன்பத்தை ‘நல்லூரான்’ ஓட்டுவான்.

Posted in கவிதைகள் | Comments Off on நல்லூரானை நாடி.

வேலன் விழா.

“யாரெவரும் எப்படியும் வாழட்டும்
இப்படித்தான்
வாழ்வேன்” எனவாழும் ‘இலட்சிய வாதியை’ப்போல்… Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வேலன் விழா.

அருள் …கார்த்திகையில்

எதுதான் முடிவு எனவும் தெரியோம்.
எதுதான் விடிவு எனவும் தெளியோம்.
விதிஎவ் வழிபோ கவிடும் புரியோம்.
வினைஎன் னபழி தருமோ அறியோம். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அருள் …கார்த்திகையில்

ஒதுங்குவோம் உன் அடி நிழலில்

யானொரு கருவி நீயே தான் சுருதி
யாதையும் பார்த்துக்கொள் நீயே!
யான் விடும் பிழை, என் சரி, நன்மை தீமை,
என்வெற்றி தோல்வி, நோய் சுகமும்,
யாவுமுன் செயலே! யான் வெறுஞ் சடமே!
எனை இயக்கும் சக்தி நீயே! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஒதுங்குவோம் உன் அடி நிழலில்

வேலனுக்கார் ஈடு?

நல்லை ஊரை நம்பி நிதம் நாடு – அது
ஞான நிழல் நல்கும் எழிற் காடு.
வல்வினையில் வைக்கும் வேலும் சூடு- உந்தன்
வாழ்வைமாற்றும் வேலனுக்கார் ஈடு? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வேலனுக்கார் ஈடு?

நல்லூர்த் திருவிழா!

அண்டிவரும் பக்தருக்கு அள்ளிஅள்ளியே – செல்வம்
அத்தனையும் தந்துயர்த்தும் அன்னைத் தெய்வமே!
குண்டு, போர், பிணி, அனர்த்தம் சூழ்ந்த போதிலே -கொற்றக்
குடை, அரணாய்க் காத்தணைத்த நல்லை வேந்தனே! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நல்லூர்த் திருவிழா!

தேற்றி அருள்புரி.

எல்லையில் லாத எழில்கள் புனைந்து
எப்போதும் புன்னகை பூத்து,
எவரெவர் வந்து இருந்து எழுந்து
இழகி அழும்போதும் பார்த்து,
தொல்லைகள் தீர்த்து, துணிவுளஞ் சேர்த்து,
தோல்விப் பயம் ஓட ஆர்த்து, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தேற்றி அருள்புரி.