என் சாபம்

ஓரிரு நொடியில் உயர்ந்த பெருவிமானம்
கீழே தடுமாறி வீழ்ந்து வெடித்ததையோ!
இயக்கி நகரவைத்த எரிபொருளே
விமான உடல்
உயிரைத் தகனக் கிரிகைசெய்து
தீய்த்ததையோ!

யார் யார் இருந்தார்?
யார் தேடி இணைந்து போனார்?
யார் என்ன ஆசைதீர்க்க?
யார் என்ன கனவுகளைக்
காணப் பறந்தார்?
கணத்தில் மரணமது
சூழவுள்ள தென்று சிலநொடிமுன்
யார் உணர்ந்தார்?
எப்பாடு பட்டிருப்பர்? எவர் எவரை நேர்ந்திருப்பர்?
அப்போ அதிசயங்கள் நிகழலையே…
அக்கணத்தில்
என்ன நடக்குதென்று எவரும்
அறிவதற்கு
முன் மரணம் சூழ்ந்து முழுதாய் உயிர்கருக்க
“ஓர் மனிதன் மட்டும் அந்தத்
துகள்நொடியில்
‘ஆபத்துக் காலக் கதவினூடு’ தப்பிவிட்டான்”
என்ற மற்றொரு செய்தி
எல்லோர்க்கும் திகைப்பாச்சே!
காலமோ? பிடர்பிடித்துத் தள்ளும் கொடுவிதியோ?
யார்யாரின் கர்ம வினையோ?
காரணத்தை
யாருரைக்கக் கூடும்?
யாரின் தவறென்று
ஆய்ந்தென்ன இலாபம்? ஆய்ந்தாலும்
மறுபடியும்
யார் மீள லாகும்?
அடுத்த கணமென்ன
ஆகுமெனப் புரியாதோர் ஆட்டத்திற்
கிச்செய்தி
ஆகாதா பாடம்?
மரித்தோர்க்கு அகவணக்கம்!
எதுவும் எவர் கைகளிலும் இல்லை
என நிரூபிக்க
விதிசெய்த வேலை… மிகக் கொடூரம்;
அதற் கென் சாபம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.