எரிந்த நாள்

எங்கெங்கோ இருந்த எங்களது வேர்களினை
அங்குதேடிச் சேகரித்தோம்.
நம் ‘ஞானப் பெட்டகமாய்’
அமைத்திருந்தோம் அதனை.
ஆவணங்கள், சுவடிகள்
எமது சரிதம் இயம்பிய நூல், பத்திரிகை,
தேடற் கரிய திரவியமாம் ஏட்டுவகை,
ஊர் நல்க…
‘பூதம்- நாம்’ பொக்கிஷமாய்ப் புதையலுமாய்க்
காத்திருந்தோம்.
‘யாழின் கர்வமாக’ பார்த்திருந்தோம்.
தனிமனித முயற்சி
சமூக எழுச்சியாக…
இனத்தின் தனித்துவமாய்,
மொழியின் முகமாய்,
எமது அடையாள ஏற்றமுமாய்க்,
கிடுகிடென்று
நிமிர்ந்ததிவ் அறிவில்லம்!
நிலைத்த நம் ஆன்மாவின்
திமிராய்த் திரண்டது நூற் செல்வம்!
இளையோர்
தொடக்கம் முதியோர் வரை அறிவை வளர்ப்பதற்கும்,
இடையறாது படைப்பாளர்
இலக்கியம் உசாவுதற்கும்,
கலைஞர்கள் தம்தம் கலைமுயற்சி
தொடர்வதற்கும்,
‘பலம் இது- தமிழர்க்கு’ என உலகம் போற்றுதற்கும்,
களமமைத்துத் தந்த ‘கலைக்கோவில்’,
ஈழத்தோர்
உழைப்பால் உயர்ந்த ‘உயிர்க்கொற்றம்’,
தீக்குளித்த
நாளின்று!
‘அடையாள அழிப்பாலே’ அடக்கி
மானம் சுயத்தை
மண்டியிட வைக்க வந்தோர்
தீமூட்ட… அந்த ‘நூற்சிதையில்’
நம் ஆன்மா
தீய்ந்து கருகிய மணம்
மன நாசிகளில்
வீசிடுது இன்றும்!
பொசுங்கியதால் வந்த கோபம்
ஆறவில்லை இன்னும்!
அதன் அழிவு தந்துபோன
பாதிப்பின் பெறுமதிக்குப் பரிகாரம்
கிடைக்கலையே
ஏன் காணும்?
‘எரிந்த சாம்பலில் எழும் பீனிக்ஸ்ப்’
போல…’சரஸ்வதி வீற்றிருக்கும்
வெள்ளைநிறத்
தாமரையைப்’ போல…
மீள மலர்ந்தொளிரும்
‘அதனுடைய’ ஏக்கம் ஆசை
ஈடேற வில்லை வென்றும்!
‘அது’ எரிந்த நாள் நினைவு இரணம்…
ஆறுமா என்றும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.