பதிலென்ன?

யாரென்ன சொன்னாலும்
யார் எதுதான் செய்தாலும்
யாரெவரைத் தேரிலேற்றி முடிசூட்டி விடுவதென்றோ…
யாரெவரைத் தள்ளிவீழ்த்தித் தாழ்த்தி மிதிப்பதென்றோ…
யாரெவரின் உயிரை எப்போது எடுப்பதென்றோ…
யாரெவரை மயிரிழையில்
காத்து அருள்வதென்றோ…
யாரெவர்கள் குத்தி முறிந்தாலும்
தோல்விகளே
தீர்ப்பதென்றோ….
வேறுசிலர் நோகாமல் நொங்கெடுக்க
வெற்றி தருவதென்றோ…
விதி காலம் முடிவெடுத்தே
நிற்கும்;
இதை நம்பார் நியாயம் பிளந்தாலும்
அப்பப்போ யாரும்
எதிர்பாரா வேளைகளில்…
எப்படி நிகழ்ந்ததென எண்ணி மலைத்திடையில்…
அதுஅதற்காம் சூழலை
எங்கெங்கோ இருந்து கொண்டு
விதிசேர்க்கும்!
வேண்டா விடயங்களை விரட்டிக்
கதறவிடும்!
காலம், கர்மவினை, கோள்களது
நிலைப்பெயர்வா யாவினையும்
நிர்ணயிக்கும் சக்தியாகும்?
உலகியலின் ஓட்டத்தை
உயிர் அறிவா முடிவுசெய்யும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.