உலகமும் நாமும்

ஓரிரு நொடிப் பொழுதில் பெரும்பெரும்
ஒளிர் நகர்கள் இடிந்திருள் சூழ்ந்தது.
பேயிரைச்ச லோடேவு கணை நிரை
பேரிடிகளாய் இலக்கைச் சரித்தது.
ஆயிரம் மைல் தாண்டி அவைபாய்ந்து
அழித்தன நெடு மாடிகள் யாவையும்.
‘ஏவு கணை எதிர்ப் பொறிமுறை’ தாண்டியும்
இலக்கு, இடங்கள் இடிந்து நொருங்கின.

மாறி மாறி இரு நாடுகளும் கணை
வைத்து விளையாட வானில் பலநூறு
சூரியன்கள் அசைந்து ஒளிர்ந்தன.
சுடவும் பட்டன, வீழ்ந்தும் எரித்தன.
நூறு நூறு விமானங்கள் வீம்பாக
நுழைந்தன எல்லை தாண்டி; அவை வகை
வேறு நூறு கொடுங்குண்டு போட்டன.
‘மிசைல்கள்’ சுட்டு சிலவோ விழுந்தன.

ஆட்க ளற்ற ‘ட்ரோன்களை’ ஆயிரம்
ஆயிரம் என ஏவி இருபுறம்
வேட்டும் குண்டும் விதைத்தோர் மகிழ்ந்தனர்.
மிகவும் முக்கிய மானோரைக் கொன்றனர்.
வேட்டை இது; தொழில் நுட்ப விஞ்ஞானத்தின்
மேன்மை… சில கணத்துள்ளே பலபல
கோட்டை கொத்தளம் சுக்குநூ றாக்கிற்று!
கொழித்த சொர்க்கங்கள் நரகமாய் மாறிற்று!

ஆனை, குதிரை, வாள், அம்பு, வில், ஈட்டி, கால்-
ஆட்படை, மாறி…டாங்கி, போர்க்கப்பல்கள்,
வேண்டும் விமானம், நகரும் படையணி,
விதவிதத் துப்பாக்கி, எறிகணை,
தாண்டி…எங்கோ இருந்து ஏவிடும் கணை,
தடுப்பு ‘iron dome’, ‘ட்ரோன்’, ‘அணுகுண்டென’
மீண்டு…ஓரிரு நாளுள் நகர்களை
விறகு கட்டைகள் போல் போர் பொசுக்குது!

யாரோ சீண்டித் தொடங்க… எதிர் நிற்போர்
தம் பலம்,வளம் காட்டி அழித்திட…
பார் இருபக்க மாகி இருவர்க்கும்
பங்களிக்க…’செய் மதிகள்’ சுடும் படம்
ஊடகங்களில் வந்து குவியுது.
“உரிமை”, “புனிதம்” என்றாள்வோர் முழங்குறார்.
யாவர் மாண்டனர்? யார்துடித்து ள்ளனர்?
யார்க்குத் தெரியுது?கவலையார்க் குள்ளது?

காலங் காலமாய் வெவ்வேறிரு நாடு
கடும் அமளிகள் பட்டுத் தம்மிடமுள்ள
ஆள்,பலம், அம்பு ஆயுதத்தால் திக்கை
அடக்க நிற்க..,அணு ஆற்றலைக் காட்டிட..,
மாளும் உலகென் றுணர்ந்தும் ‘அணுஉலை
மையம்’ மீதும் கை வைக்கத் திரிய.., நம்
சாலைகள் மட்டும் ‘பெற்றோல் கியூ’ விலே
சகல வேலையும் விட்டின்று காக்குதே!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.