உங்களால் ஆகும்

அலையாடிய வீதியில் மானுடமோ
அடிமாடெனச் சாகிறதே!
ஆழிவாடிய போதிலும் ஆட்சிநெறி
அருள் நல்க மறந்திடுதே!
முலையால் அனல் மூட்டிய கண்ணகிகள்
முளையாத நிலத்தினிலே
முதிர்கன்னிகள் வெந்தனர் தீயினிலே
முடியாதன தீமைகளே!

இனவாத மெழுந்து எரித்ததனால்
இழிவூட்டி மகிழ்ந்ததனால்
இது பேரினம் என்று நிமிர்ந்ததனால்
இரணம் மாறலை… நீதியினால்!
பிணமானது மானுடம்…. சாதியினால்
மத வன்முறை பொங்குவதால்!
பிழை எங்கெனக் கண்டுடன் தீர்ப்பதனால்
பெருவாழ்வெழும் உங்களினால்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply