காற்றில் இனியதேன் வார்த்தெந்தன் காதூடு
காய்ந்த நெஞ்சைக் குளிர்த்தும் மணியொலி!
ஊற்றுப்போல் தொடர்ந் தொலிக்கும் அதன்குரல்…
உயிரின் தூக்கம் கலைக்க…எழும் ஒளி!
காற்றில் கரைந்த இரவின் அபசுரம்
களைந்து இசையைப் பதிக்கும் பகல் ஒலி!
தேற்றிக் காலையைச் செதுக்கும் அருள் உளி!
தெய்வம் உள்ளதென் றுணர்த்துமோர் சங்கொலி!
தெய்வ மாமணிக் கீதம் பரவிடும்.
திசைகள் எங்கும் அமுதம் சுரந்திடும்.
மெய்கள்.. பொய் ஓய்வுதறி எழுந்திடும்
மேதினி ஒளி கொண்டு துலங்கிடும்!
பைய அணுகும் பகலில் புனிதமும்
பரிவும் பொங்கிடக் காலை புலர்ந்திடும்!
தெய்வக் காவலில் நேரம் நகர்தலைச்
செப்பும் தேன்மணி…வாழ்வை இயக்கிடும்!