நிலையாமை

யார்வயிற்றில் யார்பிறப்பார் யாரு கண்டது? -அதை
யார் முடிவு செய்தவர்கள் யார் உரைப்பது?
பேய் வயிறோ நாய் வயிறோ யார் உணர்வது? -வந்த
பின் அழுது என்ன பயன்…யார் நினைத்தது?

“ஏழை வயிற்றில் ஏன்பிறந்தேன்” என்று ஏசினாய் -ஏன்
இவர் வயிற்றில் பிறக்கவில்லை என்றும் ஏங்கினாய்!
நீ புரிந்த நன்மை தீமை நீ பிறந்திடும்- இடம்
நிர்ணயிக்கும் ….நீயும் வந்தனுபவிக்கிறாய்!

“பிறந்திழைத்தம்” என்று நன்மை செய்யும் ஏழையும்-மறு
பிறப்பில் செல்வ வீட்டில் தோன்றி ஆழக் கூடலாம்!
திருவிலே திளைத்து மமதை கொண்டு தீமையே-செய்து
சிறந்து வெல்வோர் மீண்டும் நரக வீட்டில் தோன்றலாம்!

என்ன நேரும் மறுகணத்தில் என்றறிந்திடோம்-அற்ப
இதயம் கொண்டு எத்தனை தான் செய்து மாய்கிறோம்?
வன்மத் தோடு மற்றவன் மேல் ஏறி வெல்கிறோம்-யாவும்
மாறும்; யார் உணர்ந்து நன்மை செய்யப் போகிறோம்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply