காலத்துடன் வாழ்தல்

காலமெனும் பட்சி
இரவு பகற் சிறகை
மாறிமாறி அடித்துப் பறந்து வர
வரலாறு
தாவி நகர்கிறது!
அதன் மூச்சாய்க் காற்றும்
வீசிக்கொண் டிருக்கிறது!
இந்தப் பறவையுடன்
நானும் சிலகாலம் பறக்கக்
கொடுத்துவைத்தேன்!
நீண்ட யுகக் கடல்கள் தாண்டி
வரும்பறவை
மீண்டும் யுகம் பலதைத் தாண்டும்;
அதன் சிறகில்
ஓரிறகு போலேநான்…
விரைவில் உதிர்ந்துவிழக்
கூடும்…அதன் ஆயுளுடன் ஒப்பிடையில்;
என்றாலும்
சாதா ரணமல்ல
அதன் நிழலில் நான் வாழும்
நாட்களெனும் கர்வத் துடன்
இன்று நான் வாழ்வேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply