எது வழி சொல்

உனது நிழல் மட்டும் எனது இடர்த்தீயை
உருவி அணைத்தோட்டுமாம் -திசை
உலவும் திருப்பாதம், அபய கரம், நேத்ரம்,
உதவி அருள் ஊட்டுமாம்.
நனவில் அலைத்தாலும் கனவில் வழிசொல்லி
நலிவுகளைப் போக்குமாம் -அற
நகலுன் எழில் நாமம் நமது மிடி சாய்க்கும்
நமனை அடித்தாட்டுமாம்!

உயிரும் வதைகின்ற, உடலும் சிதைகின்ற,
உலகம் இதுதானடா -எவர்
உருவமதும் எந்த உயிலும் நிலைத்திங்கு
உறுதியடை கின்றதா?
மயிரும் உதிர்கின்ற வகையில்…எவர் வாழ்வும்
மறையும் விதி நீளுமா? -எது
வழியென் றுரை நிம் மதியும் பெற…இந்த
மருமப் புதிர் தீரடா!

கடலின் அலைபோல கவிதை வரிபோல
கனவில் வருகின்றவா -நிதம்
கருணை மழையாக கடின மனப்பாறை
கரையப் பொழிவாயடா!
விடையில் பொருள் நூறு விரியும் படி…சொல்ல
வினவி எமைத்தூண்டுவாய் -புது
விதிகள் வரைகின்ற விடிவின் ஒளியே…முன்
விரியும் இருள் தூற்றுவாய்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply