என்னைப்பற்றி

சுருக்கச் சுயசரிதை

யாழ்ப்பாணத்தின் நல்லூரில் 1973 மார்ச் 5 ஆந் திகதி பிறந்து வளர்ந்தேன். தந்தை இரத்தினம்.தனபாலசிங்கம், தாய் மேனகா.  எனக்கு ஒரு சகோதரி. ஆரம்பக் கல்வியை நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்திலும், பின் யாழ் இந்து கல்லூரியிலும் கற்று, உயர்தரத்தில் உயிரியல் பாடத்தில் பயின்று, யாழ் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தை 2000 ஆம் ஆண்டில் பெற்றேன். 2007 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் ‘குடிசன அபிவிருத்தியில் முதுகலைமாணிப் பட்டத்தை பெற்றேன். ஆரம்பத்தில்  உடுவில் மகளிர்  கல்லூரி, விசுவமடு மத்திய மகா வித்தியாலயம், பளை மத்திய கல்லூரி என்பவற்றில் உயிரியல் ஆசிரியராக பணியாற்றினேன். 2001 இல் நடந்த இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியெய்து நிர்வாக சேவையில்   பணியாற்றுகிறேன்.

மனைவி லங்கினி விஞ்ஞானப் பட்டதாரி. யாழ் சம்பத்திரிசியார் கல்லூரியில் இரசாயனவியல் ஆசிரியர்;. புத்திரிகள் இருவர் ஆருத்ரா, அட்சரா.

இயல்பாக கவிதைத்துறையில் ஏற்பட்ட திடீர் ஆர்வத்தால் 1992 இல் யாழ் இந்துக் கல்லூரி உயர்தர மாணவர் மன்ற நிகழ்வுக்காக கவிதை எழுதினேன். பின் யாழ் இந்துக்கல்லூரி தமிழாசான் கவிஞர் ச.வே.பஞ்சாட்சரத்தின் ஊக்குவிப்பில் கவியரங்குகளில் பங்குகொண்டேன்.  அகில இலங்கைக் கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் அறிமுகத்தால் நல்லூர் கம்பன் விழாவில் 1993 இல் பங்கு கொண்டேன். பின் ஈழத்து முன்னணிக் கவிஞர்களில் ஒருவரான இ.முருகையன் அவர்களின் நீர்வேலியிலிருந்த வீடு தேடிச் சென்று ஓரிரு ஆண்டுகள் அவரின் அணுக்கத் தொண்டனாகி கவிதை யாப்பின் நுட்பங்களைக் கற்றேன்.

சாளரம் சஞ்சிகை என் கவிதை ஒன்றை முதலில் பிரசுரித்தது. சிரித்திரன் சஞ்சிகை என் கவிதைகளுக்கு நல்ல வரவேற்பு வழங்கியிருந்தது. சிரித்திரன் சிவஞானசுந்தரம் ஐயா ஊக்கமளித்தார். 1995 இல் அ.யேசுராசா அவர்களின் ‘கவிதை’ இதழால் நடாத்தப்பட்ட ‘மஹாகவி நினைவுக் கவிதைப் போட்டி’யில் முதற்பரிசைப் பெற்றேன். இதன் தொடர்ச்சியாக எனது பேட்டியொன்றை கவிதை இதழ் முதலில் பிரசுரித்தது.   1995 இல் வலிகாமம் இடப்பெயர்வினைத் தொடர்ந்த மீள்குடியேற்றத்தின் பின் பல பத்திரிகைகள், ஈழத்தின் அனேகமான சஞ்சிகைகளில் என் கவிதைகள் வெளிவந்தன. இலங்கை வானொலியின் இதயசங்கமம், கவிதைக்கலசம் போன்ற நிகழ்ச்சிகளில் என் கவிதைகள் வாசிக்கப்பட்டன. பல்கலைக்கழகக் காலத்தில் மூன்று ஆண்டுகளும் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மட்ட போட்டிகளில் சிறந்த கவிஞனாக தெரியப்பட்டேன்.

இதுவரை எனது நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘கனவுகளின் எல்லை’ 2001 இல் வெளிவந்தது. வடகிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சால் வழங்கப்பட்ட சிறந்த கவிதைத் தொகுதிக்கான விருதை பெற்றது. ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ 2004 இல் வெளிவந்து இலக்கிய பேரவை பரிசைப் பெற்றது. இத்தொகுப்பு 2004 இல் வெளிவந்ததில் ‘சிறந்த கவிதைத் தொகுதி’ என 26.12.2004ஆம் திகதி வெளிவந்த ‘ஆனந்தவிகடன்’ சஞ்சிகையில் ‘சிறந்தவை 2004’ பகுதியில் தமிழக எழுத்தாளர் அமரர் ‘சுஜாதா’ தெரிவு செய்து இருந்தார். மூன்றாவது தொகுப்பு ‘எழுதாத ஒரு கவிதை’ 2013 இல் வெளிவந்தது. நான்காவது தொகுப்பு புயல் மழைக்கு பின்னான பொழுது 2014 ல் வெளிவந்தது. பிரசுரமாகாத ஆயிரக்கணக்கான கவிதைகள் உள்ளன.

நலலூர் பிரதேச செயலகத்தால் 2009இல் வெளியிடப்பட்ட நல்லூர் பிரதேச கலைஞர் விபரத்திரட்டான ‘கலைஞானம்’ நூலிலும், இலங்கை நிர்வாக சேவைச் சங்கத்தால் 2012இல் வெளியிடப்பட்ட நிர்வாக சேவையைச் சேர்ந்த கலைஞர்களின் விபரம் அடங்கிய நூலிலும் எனது தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1992 இல் இருந்து கவியரங்குகளில் பங்குபற்றி வருகின்றேன். இதுவரை நூற்றுக்கணக்கான கவியரங்குகளில் பங்குபற்றியிருக்கிறேன். ஈழத்தின்  தலைசிறந்த மூத்த கவிஞர்களான கவிஞர்.இ. முருகையன், காரை சுந்தரம்பிள்ளை, ச.வே.பஞ்சாட்சரம், சோ.பத்மநாதன், கல்வயல் குமாரசுவாமி உட்பட பலரின் தலைமையில் கவியரங்கேறியிருக்கிறேன்.

2002இல் இருந்து கொழும்பு கம்பன் விழாக்களில் தமிழ் நாட்டின் பிரபல கவிஞர்களின் தலைமையில் கவியரங்குகளில் பங்குபற்றி வருகிறேன். கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் மு.மேத்தா, கவிஞர் அப்துல் காதர், கவிஞர் நெல்லை ஜெயந்தா ஆகியோரின் தலைமையில் இக்கவியரங்குகளில் பங்கெடுத்துள்ளேன்.

நல்லூர் பிரதேச கீதம், காரைநகர் பிரதேச கீதம், பூநகரிப் பிரதேச கீதம், தெல்லிப்பளை பிரதேச கீதம், மருதங்கேணி பிரதேச கீதம் என்பன என்னால் இயற்றப்பட்டன. இது என் சுருக்கச் சுயசரிதை.

தொடர்புகட்கு

மின்னஞ்சல் :thanajeyaseelan@gmail.com
இணையத்தளம்:www.thanajeyaseelan.com
தபால்: 20 கீழ் 3,பாரதி வீதி
சுண்டிக்குழி
யாழ்ப்பாணம்
இலங்கை.

12

12

12

Leave a Reply