நிழல் உறவு

நிழலினது தந்தை… வெளிச்சம்.
அதன் தாயோ
ஒளி ஊடு புகவிடாத ஒருபொருள்.
இவை புணர
நிழல் பிறக்கும்!
தந்தை சொல் கேட்டு
அது கணமும்
வளர்ந்து தேயும்.
தாயின் வெவ்வேறு வடிவுகொள்ளும்.
தந்தை இலையெனிலித் தனயனில்லை.
முழு இரவில்;
எந்த ஒளிமுதலும் இல்லா
ஒரு பொழுதில்;
இந்த நிழற் துணைச் சேய்
எங்கும் உதிக்காது.
இந்த நிழல்தான் இணைபிரியாத்
துணையென்ற
சிந்தனை தவறு.
வெளிச்சம் எதும் இல்லையென்றால்
எந்த நிழல் உறவும்
எமக்குக் கிடைக்காது.
அந்த வெளிச்சம்
வெறும் ஒளிச் சக்தியன்றி
வந்த அருள், அறிவு, பொன், பொருள்,
பலம் வெற்றி
என்ற ‘வெளிச்சங்கள்’…
இவை இல்லை நமைச் சூழ
என்றாலும்…
எந்தநிழற் துணையு மெமக்கிருக்காது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.