மாயலோகம்.

பிறைநிலாச் சீப்பால்
கரிய இராக் கூந்தலைத்
தலைவாரி
அங்கே ஒளிந்தசையும் விண்மீனாம்
பேன்களினைப் பார்க்கிறாளா
இயற்கையெனும் தாய்க்கிழவி?
இரவு அவள்கைக்குள்
‘இங்கே அட அங்கே
கடிக்கிறது’ என்று பேன்களினைக் காட்டிடுதோ?
நிலாச்சீப்பால் தலைசீவி
விண்மீனாம் பேன்களினை
முற்றாய் ஒளிக்க முடியாது!
ஏனென்றால்
ஈர்களாம் விண்மீன்கள் பொரித்து
வளர்ந்து நாளை
பேன்களென மாறும்!
இயற்கை வால்வெள்ளி யெனும்
ஈர்கோலி ஒன்றினை வேண்டியதோ?
மறுவாரம்
தூமகேது தோன்றுமெனச்
சொல்லுது ஊர் வானொலியும்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply