கனவுகளின் எல்லை

நனவுகள் நமக்குத் துயரையே நல்கிடினும்,
நனவுகளில் நமக்குத்
தீமையே நிகழ்ந்திடினும்,
நனவுகள் எம்மை நசித்துப் பிழிந்திடினும்,
நனவுகளில் ஏதும் நன்மை நடவாதா?
நனவுகள் இன்பத்தை
நமக்கு அருளாதா?
நனவுகள் நிம்மதியை,
நாமேங்கும் அமைதியினை,
ஈடேறா ஆசைகளை எமக்கருளாதா என்று
கனவுகளைக் கேட்கின்றோம்!
நனவு நமை விரட்டுவதால்…
கனவுகளில் நனவுகளைத் தேடுகிறோம்,
ஓடுகிறோம்!
கனவுகளில் எதையெதையோ கண்டும்
யதார்த்த
நனவில்எதுங் காணாது
நம்பிக்கை தகர்ந்திடினும்
கனவுகளே ஏக்கத்தைத் தணிப்பதனைக் பார்க்கின்றோம்!
கனவுகளில்…
ஆசைகள் பலிக்கும் படியான
கனவுகளைத் தேடிநிதம் காண்கின்றோம்!
காணுமந்தக்
கனவுகளில்… ‘காணாத’ நிம்மதியை அனுபவித்தோம்!
கனவுகளின் மடிச்சூட்டில் தான்நாம்
வதைக்கின்ற
நனவு நெருப்புள்ளும்
தப்பிப் பிழைக்கின்றோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply