எழுக!

கண்களில் நீர் நதி வற்றிடா தோடிடும்
காலம் தொடருது எதனால்?
கடைக்கண்ணும் காட்டாக் கடவுளர்…கோவில்-
களில் உறங்கும் நிலை எதனால்?
புண்களும் ஆறாப் பொழுது தொடருதே
புழுத்திடும் நாளை பார் அதனால்
பூசுக மருந்துகள் புனிதங்கள் பேணுக
பொலிவெழ முயலுவோம்…இது நாள்!

கண்களில் மெய் ஒளி கருத்தினில் புது வழி
கைகளில் பலமுடன் எழுக!
கவிதைகள் பாடுக கடவுளையும் தூக்கம்
கலைத்து எழுப்பியே விடுக!
புண், மன இரணம், வடு, மாற்ற வழிவகை
பொருத்தமாய்க் கண்டுமே தெரிக!
புல்லையும் பூவையும் நட்பெனப் போற்றுக
புண்ணியம் சேர்த்துயிர் பெறுக!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply