துயில்

மூன்றாம் பிறையினது மூலைகளில்
கயிறிணைத்துத்
தூளிகட்டி உன்னைத்
துயிலவைக்க நான் நினைக்க…
மூன்றாம் பிறையே முழுத்தூளி
என என்னை
ஏற்றிவிட்டாய்; பாட்டில்
என்னே நின் கவிச்சிறப்பு?
தாலாட்டுப் பாடித்
தளிருன்னைத் தூங்க வைக்க
தாலாட்டே நீயானாய் தழுவி;
எனை மறந்தேன்!
சாமரமாய் முற்றத்துத் தாவரங்கள்
தலையசைக்க
நானும் உருவேற்றி நின்றேன்.
தானாய் உருவேறி
நீ அசைவாய் சாமரமாய்…
நிம்மதியாய் நான் துயின்றேன்!
நானுன்னைத் தூங்கவைக்க,
நீ என்னைத் தூங்க வைக்க,
தூங்காத வாழ்க்கைக்குள்
நம்மை என்று
மீட்டெடுப்பேன்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply