காலத்தின் கூறு நாள்.

இரவினது கர்ப்பத்தில் இருந்து
கிழக்கினிலே
பிறக்கும் பகல் வளர்ந்து
கணமும் பெரிதாகி
அந்தியிலே மூப்படைந்து
அடுத்த சில நொடியில்
நொந்து மரித்து
தொடுவான் சிதை எரிந்து
கரைந்து சாம்பலாய்க் கழிகிறது சமுத்திரத்தில்!
மறுபடியும் பகல்… இரவின் கர்ப்பத்தில்
கிழக்கினிலே
பிறக்குமது;
இந்தப் பிறப்பும் இறப்பும்தான்
‘நாளென்றும்’ மாறிடுது!
நம் வாழ்வை நகர்த்திடுது!

காலத்தைக் கோடிகோடிக் கூறாக்கி
அதனில் ஒவ்வோர்
கூறான நாட்கள்
எம்வாழ்வைக் கொண்டிழுத்து
ஓடிடுது;
‘ஒவ்வொருவர்க் கொவ்வொரு எண்ணிக்கைக்’
கூறு நாள் பரிசாகும்!
அதைக்கொண்டு பிறப்பிருந்து
இறப்பு வரைக்கும் எதைச்செய்தோம்
என்பதுதான்
“வரலாறா? அற்பமா?” நம்
வாழ்வென்று பறைசாற்றும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.