நினைவுகளை மீட்டல்

நினைவுகள் சிலது கடல் நீரில்
மூழ்கினவாம்.
நினைவுகள் சில மாரி
மழையில் கரைந்ததடா.
நினைவுகள் சிலது
நெருப்பில் பொசுங்கியதா?
நினைவுகள் சிலது பனியில் உறைந்தனவே.
நினைவுகள் சிலது
வனத்திடை சிதைந்தன கேள்.
நினைவுகள் சில பாலை
வெயிலிலே வாடினபார்.
நினைவுகள் சிலது நிலத்தில் புதைந்தன தான்.
நினைவுகள் சிலது நெடும்
காற்றில் சிதறிறகாண்.

ஒவ்வோர் நினைவுகளும்
ஏதோ ஓர் சூழலிலே
அவ்அவ் குளிர் அனலின்
இயல்பூற நின்றது…இன்றை
அனலும், குளிர்காற்றும்,
வெயில் பனியும்…அன்றை
நினைவுகளை மீண்டுமின்றெம்
நெஞ்சிற்குச் சொல்லிடுதே!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.