பங்கம் துடைப்பேன்

சொற்கள் நதியாய்ச்
சுரந்துகொண்டே இருக்க,
கற்பனை
ஆழம் அகலம் காணாக் கடலாய்
விரிந்த படி பெருக,
விந்தைப் பொருள்வகையோ
பரந்த வெளியாகப்,
பயணித்த கவிதை…இன்றோ
சொற் சுவை வற்றி,
கற்பனைக் கடல் வாடி
இல்லையென் றாகி,
பாலை மாத்திரம் எஞ்சிச்
சுருங்கி,
உயிர்ப்புமின்றி,
சூடு துடிப்பின்றிக்
கிடக்கிறது!
அன்று உலகம் வரை அளாவி
விரிந்து பரந்த பொருள்…
விற்கப் பெறுமதியும்
தரமும் குறைந்து சப்பென்று
ஆனதிங்கு!
எங்கள் பரம்பரையின் ஈடு இணையற்ற
சிங்கக் கவிதை
நவீனச் சிறைசிக்கித்
‘தொங்குமான்’ ஆகித் துடிக்கிறது!
புதுமைதேடிப்
பங்கப் படுத்தியவர்
பலியானார் வரலாற்றில்!
தங்கத் தமிழ்க்கவியைத்
‘தற்காலத்திற் கேற்ப’
பொங்கவைத் துலகம் புரியவைத்து
அதை வளர்க்க
“எங்கும் எவருமில்லை” என்ற
வசை மாறவைத்து
“இங்குவே றெவரும் இல்லை”
எனும் பழி களைந்து
பங்கம் துடைப்பேன் யான்…
பார் போற்ற உயர வைப்பேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.